அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் அடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மெர்சல். 2017 ஆம் வெளியான இந்த படத்தில் மருத்துவராக வரும் நடிகர் விஜய், வடசென்னையில் வெறும் 5 ரூபாய்க்கு மக்களுக்கு சிகிச்சை அளிப்பார். இந்த கதாபாத்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் விஜய் இந்த படத்தில் அரசால் ஏன் சலுகை விலையில் மக்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க முடியாது என்றும் கேள்வி எழுப்புவார்.
படத்தில் இந்த கதாபாத்திரம் உருவாவதற்கு முக்கிய தூண்டுகோலாக இருந்தவர் உண்மையிலேயே வடசென்னையில் 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்த மக்கள் மருத்துவர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களே. சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் மக்களுக்கு வெறும் 5 ரூபாய் செலவில் சிகிச்சை அளித்து வந்தார். 71 வயது நிரம்பிய டாக்டர் ஜெயச்சந்திரன் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்த இரங்கல் செய்தி வடசென்னை பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வடசென்னை மக்களால் “அப்பா, தாத்தா” என அன்போடு அழைக்கப்பட்ட மருத்துவர் ஜெயச்சந்திரன் இறப்பு அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மருத்துவம் மட்டுமின்றி, நேதாஜி சமூகசேவை இயக்கம் மூலம், ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துதல், மரம் நடுதல், இரத்ததான முகாம், மருத்துவ முகாம் போன்ற பல்வேறு சமூக சேவைகளில் தனது அர்ப்பணிப்பை அருளிய டாக்டர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் 41வருடங்களாக மருத்துவம் பார்த்த ‘மக்கள் மருத்துவர்’ ஜெயச்சந்திரன் மறைவெய்தியது வடசென்னை மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு. மனிதநேயத்திற்கு சாட்சியமாக திகழ்ந்த மருத்துவரின் மறைவை தனிப்பட்ட இழப்பாக கருதி வருந்தும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.
வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் 41வருடங்களாக மருத்துவம் பார்த்த ‘மக்கள் மருத்துவர்’ ஜெயச்சந்திரன்
மறைவெய்தியது வடசென்னை மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு!
மனிதநேயத்திற்கு சாட்சியமாக திகழ்ந்த மருத்துவரின் மறைவை தனிப்பட்ட இழப்பாக கருதி வருந்தும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் pic.twitter.com/S22hSysSuc
— M.K.Stalin (@mkstalin) December 19, 2018
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது இரங்கல் செய்தி, “சென்னை வண்ணாரப்பேட்டையில் 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் இறப்பு செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது.அவரின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல மக்களுக்கும் பேரிழப்பு.அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் திரு.ஜெயச்சந்திரன் அவர்களின் இறப்பு செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது.அவரின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல மக்களுக்கும் பேரிழப்பு.அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். pic.twitter.com/2p6ucn3bBV
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) December 19, 2018
தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பெரும்பாலான மக்கள் “அப்பா, தாத்தா” என்றழைக்கும் அளவிற்கு மக்களின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்றவரும், ஏழை எளிய மக்களுக்கு 5 ரூபாயில் மருத்துவம் பார்த்து வந்தவருமான டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது” என பதிவு செய்துள்ளார்.
வாழ்நாள் முழுவதும் மக்கள் சேவைக்காக வாழ்ந்து, பிற மருத்துவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவிற்கு தமிழ் ஸ்பார்க் செய்தி நிறுவனத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.