பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘ஹீரோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தை முடித்துவிட்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதேநேரம், பி.எஸ்.மித்ரன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் பூஜையை, படக்குழுவினர் சென்னையில் நேற்று (புதன்கிழமை) நடத்தியுள்ளனர்.
இப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று தலைப்பு வைத்து இருப்பதாக அறிவித்தனர். இந்த தலைப்பு தனக்கு சொந்தமானது என்று புதுமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த புதுமுக இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை, “நான் ‘காக்கா முட்டை’ திரைப்படத்துக்கு வசனம் எழுதி விருதுகள் பெற்று இருக்கின்றேன். ‘குற்றமே தண்டனை’ திரைப்படத்தில் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை எழுதி உள்ளேன். பல நாவல்களும் எழுதி இருக்கின்றேன். தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருக்கின்றேன்.
அந்தவகையில், படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். படத்துக்கு ‘ஹீரோ” என்ற தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு வருடத்துக்கு முன்பே பதிவு செய்துள்ளோம். ஆனால் திடீரென்று சிவகார்த்திகேயன் படத்துக்கு ‘ஹீரோ’ என்று தலைப்பு வைத்து இருப்பதாக அறிவிப்பு வந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘ஹீரோ’ தலைப்பு எங்களுக்கே சொந்தம். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன” எனக் கூறியுள்ளார்.
மேலும், அவர் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.