கூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருந்தால் அது மயக்கம் எனவும் யோசித்துதான் முடிவு எடுப்பேன் என்றும் லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் லட்சிய திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கழகத்தலைவர் டி.ராஜேந்திரனிடம் விருப்புமனுக்களை அளித்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர், “முன்பு நான் சத்திரியன் இப்போது நான் விவேகமான சாணக்கியன் யோசித்துதான் முடிவு எடுப்பேன். இன்றைய அரசியலில் அறிவாளி, உழைப்பாளி, போராளி என நினைத்தால் ஏமாளியாகி விடுவார்கள்.
ஒரு பெரிய கட்சி அவர்களது சின்னத்தில் நிற்க கூறியதால் அதை ஏற்க மறுத்து விட்டேன். அ.தி.மு.க, தி.மு.கவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்குவேன். இயங்கிக் கொண்டிருந்தால்தான் அது இயக்கம். கூட்டணிக்காக ஏங்கிக் கொண்டிருந்தால் அது மயக்கம்” எனக் கூறினார்.